Tuesday, 22 September 2015

நாய்

ளர்ப்பு பிராணிகளில் எப்போதுமே நாய்க்கு தனி இடமுண்டு. பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகளில் முன்னணி வகித்தாலும் நாய்க்கு இருக்கும் மதிப்பே தனி தான்.
நன்றியுள்ளது என்பது மட்டுமல்ல பாதுகாப்பு என்று வந்தால் மிரட்டி எடுக்கும். சிலருக்கு நாய் என்றால் உயிர்! சிலருக்கு அருவருப்பு. எனக்கு நாய் என்றால் உயிர் :-) .
நாய் மீதான விருப்பம் என்பது ஜீனில் கூட இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக நாய் மீது விருப்பம் கொண்டுள்ளவர்கள் இருக்கிறார்கள். இது எங்கள் குடும்பத்திலேயே உண்டு.
எங்கள் குடும்பத்தில் நான்கு தலைமுறையாக நாய் மீது அன்பு கொண்டுள்ளவர்கள் இருக்கிறார்கள். எங்கள் தாத்தா காலத்தில் இருந்து என்னுடைய தலைமுறை வரை எங்கள் வீட்டில் நாய் மீதான அன்பு பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது.
தற்போது என்னுடைய பையனும் நாய் என்றால் பிரியமாக இருக்கிறான்.
கிராமத்தில் இருந்து நகருக்கு வந்ததால் எங்களால் தொடர்ந்து நாயை வளர்க்க முடியவில்லை. காரணம், வேறு எங்காவது செல்லும் போது அதைப் பராமரிக்க, சாப்பாடு கொடுக்க என்ற நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் தொடர்ந்து வளர்க்க முடியவில்லை ஆனால், நாய் வளர்க்க முடியவில்லையே என்று எனக்கு இருக்கும் வருத்தம் அளவிடமுடியாதது.
இது ஒரு ஏக்கமாகவே மாறி விட்டது. எங்காவது நாய்க் குட்டியைப் பார்த்தால் கையில் எடுத்துக்கலாம் தடவிக் கொடுக்கலாம் என்று தோன்றும்.
கிராமத்தில் இருந்த போது ஒரே சமயத்தில் மூன்று நாய்கள் இருந்தன. ஒரு பொம்மரேரியன் மற்றும் இரு நாட்டு நாய்கள். நாட்டு நாய்கள் நீங்கள் எப்படி நடந்து கொண்டாலும் எப்போதும் ஒரே மாதிரி அன்பை வெளிப்படுத்தும் ஆனால், பொம்மரேரியன் நாய்கள் பொறாமைக் குணம் கொண்டவை.
இவற்றைக் கண்டு கொள்ளாமல் நாட்டு நாயிடம் நாம் கொஞ்சம் கொஞ்சினால் போதும் இவைகளுக்கு பொறுக்காது. உடனே அவற்றுடன் சண்டைக்கு வந்து விடும். நாய்கள் சைக்கலாஜி சுவாரசியமானவை :-) .
Dogநாய்க் குட்டிகளின் சேட்டைகளை எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காது. முகத்தில் நவரச நடிப்பைக்காட்டி நம்மை அசத்தும். ஒரு நாய்க் குட்டி இருந்தால், நமக்கு நேரம் போவதே தெரியாது. ஏதாவது சுட்டித்தனமாக செய்து கொண்டே இருக்கும்.
வீட்டில் இருக்கும் போது நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் காலுக்குள்ளயே சுற்றிக்கொண்டு இருக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு நாய் ஒரு வரப்பிரசாதம்.
நாங்கள் தோட்டத்தில் வசித்த போது “டைகர்” என்ற நாட்டு நாய் வளர்த்தோம். ஒருவர் நன்றியுடன் இருந்தால் சம்பளம் கொடுக்காம நாய் மாதிரி சாப்பாடு போட்டு வளர்க்கிறார்கள் என்று கூறுவார்கள் அல்லவா. முற்றிலும் உண்மை.
நாங்கள் தோட்டத்தில் இருந்ததால் இரவில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். பாம்பை கொல்லப் / அடிக்கப் பயன்படுத்தும் கம்பு எப்போதும் தயாராக இருக்கும். பாம்பு வருகிறது என்றாலே டைகர் கத்தும் சத்தத்தில் வித்யாசத்தை உணரலாம்.
வழக்கமாக கத்துவதற்கும் பாம்பு போல ஒரு ஐந்து வந்தால் அதைப் பார்த்து கத்துவதற்கும் வித்யாசம் இருக்கும். இதை வைத்தே நாங்கள் எச்சரிக்கையாகி விடுவோம். நாங்கள் டைகருக்கு சாப்பாடு மட்டுமே போட்டோம் ஆனால், எங்களுக்கு இவன் செய்த உதவிக்கு நாங்கள் ஆயுளுக்கும் கடமைப்பட்டு இருக்கிறோம்.
வாசலில் தான் கட்டி வைத்து இருப்போம் இதைத் தாண்டி எவரும் உள்ளே செல்ல முடியாது. யார் வந்தாலும் கதவை திறக்கும் முன் டைகர் கட்டப்பட்டு இருக்கிறதா என்று உறுதி செய்த பிறகே நுழைவார்கள். அந்தளவிற்கு மிரட்டலாக இருக்கும். எனக்கு மட்டும் கட்டுப்படும்.
அதன் வாழ்நாளில் குறைந்தது 50 பாம்பிற்கு மேல் கொன்று இருக்கும். இறுதியில் ஒரு பாம்புடன் சண்டை போட்டு இறந்தது எங்கள் குடும்பத்தில் எவராலும் தாங்க முடியவில்லை. இதைப் புதைக்கும் போது சக மனிதருக்கு செய்யும் அனைத்து கடமைகளையும் செய்து புதைத்தோம்.
14 வயதாகியும் நல்ல உடல் நலத்துடன் இருந்த டைகர் பாம்புக் கடியால் விஷம் தாக்கி இறந்தது இன்று நினைத்தாலும் துக்கமாக இருக்கிறது. டைகர் இறந்தாலும் பாம்பும் காலையில் இரண்டு துண்டாகக் கிடந்தது.Dog
இதன் பிறகு சிபி, கஃபி என்ற இரு நாய்கள் இருந்தன. இதில் சிபி என்பது பொம்மரேரியன் கஃபி என்பது நாட்டு நாய். சிபி போல ஒரு நாய் எங்களுக்கு திரும்ப கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
ஒரு குழந்தையைப் போல எங்கள் குடும்பத்தினருடன் இருக்கும். நாங்கள் எங்காவது வெளியே சென்றால் நாங்கள் வரும் வரை வேறு எவரும் உணவு கொடுத்தால் கூட சாப்பிடாது. சோர்ந்து போய் இருக்கும்.
நாங்கள் வரும் சத்தம் கேட்டால் இது அடையும் சந்தோசத்தைப் பார்க்க கண்கள் கோடி வேண்டும். பொம்மரேரியனுக்கு ஒரு குணம் இருக்கிறது. எங்கே இருந்தாலும் ஏதாவது அடியில் தான் படுத்து இருக்கும். கட்டில் இருந்தால் கட்டில் அடியினுள் படுத்து இருக்கும்.
என் அம்மாவின் கட்டில் அடியில் தான் பெரும்பாலும் படுத்து இருக்கும். என் அம்மா / நாங்கள் யாரும் தூங்கும் போது வெளி ஆள் யாரும் நுழைய முடியாது. முதலில் உர்ர்ர் என்ற சத்தம் மட்டும் வரும்.. அதையும் மீறி யாரும் சென்றால் கடி நிச்சயம் :-) .
நான் ஏழாம் வகுப்பில் இருந்து மாணவர் விடுதியில் தங்கித் தான் படித்தேன். எனவே விடுமுறைக்கு மட்டுமே வீட்டில் இருப்பேன் இருந்தாலும் இந்த நாய்கள் என் மீது வைத்து இருந்த அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
கஃபி க்கு கண்பார்வை மிகவும் உறுதி. நான் விடுமுறையில் வரும் போது நான் தூரத்தில் நடந்து வரும் போதே என்னுடைய நடையை வைத்தே கண்டு பிடித்து விடும். அப்போது கத்த ஆரம்பித்தால் நான் வந்து அவிழ்த்து விடும் வரை இதைக் கட்டுப்படுத்த முடியாது.
நான் அவிழ்த்து விட்டவுடன் அது செய்யும் அட்டகாசத்தை நினைத்தால் இன்றும் ஏக்கமாக இருக்கிறது.
பின்வரும் இந்தக் காணொளி எல்லாம் சும்மா ஜுஜுபி. எங்க கஃபி இது போல 10 மடங்கு இருக்கும் (மிகைப்படுத்தவில்லை). அப்படி என்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துக்குங்க.
இதில் சரியாக ஒன்றாவது நிமிடத்தில் வரும் நாய் போல அடங்காமல் இருக்கும்.

எறும்பு

 அதிக எடையைத் தூக்க வல்லவை
எறும்பு குழுவாக வாழும் ஆறுகால்கள் கொண்ட ஒருபூச்சியினமாகும். இவை வியப்பூட்டும் வகையில் குழு அல்லது குமுக ஒழுக்கம் (சமூக ஒழுக்கம்) கொண்ட வாழ்வைக் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட குமுகத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication). இது நுட்பமானதும் மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது.
உலகின் எல்லாப் பகுதிகளிலும் எறும்புகள் காணப்பட்டாலும், இவற்றில் பெரும்பாலானவை வெப்ப வலயங்களிலேயே வாழ்கின்றன. பல்வேறுபட்ட தரவுகளின்படி, இத்தரவுகள் தங்களுக்குள் சிறிதளவு மாறுபடினும், எறும்பிலுள்ள இனங்களின் (species) எண்ணிக்கை, 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உயர் எல்லையாக, கிட்டத்தட்ட 22,000 இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது.
 இவ்வாறு மிகக்கூடிய எண்ணிக்கையில் இனங்களை உள்ளடக்கி இருப்பதனால், எறும்புகள் உலகின் விரிவாக உயிர்வாழ்வதில் வெற்றி நாட்டிய உயிரினமாகவும் கருதப்படுகிறது. எறும்புகளின் மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் குமுக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாக கருதப்படுகின்றன. 
பொதுவாக எறும்புகளைக் காண முடியாத இடம் தென் பனிமுனைப் பகுதியாகும். எறும்புகள் ஏறத்தாழ 110 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தனி வகையான உயிரினமாக உருப்பெற்றன எனக் கருதுகின்றார்கள். நிலவுலகில் பூக்கும்நிலைத்திணை(தாவரம்) தோன்றிப் பரவிய பின்னரே (100-140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) எறும்புகள் பல்வேறு உள்ளினங்களாக வளர்ச்சி பெற்றன.

புவி

அப்போலோ 17லிருந்து காணம் புவியின் வண்ணப் படம்

புவி (Earthசூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள்,விட்டம்நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில்சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில்ஒன்று. இதனை உலகம்நீலக்கோள் ,[note 3] எனவும் குறிப்பிடுகின்றனர்.
மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் [10]வாழும் இடமான இந்த புவி, அண்டத்தில் உயிர்கள்இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது,[11][12][13][14] மேலும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில் உயிரினங்கள் தோன்றின. அது முதல் புவியின் உயிர்க்கோளம் குறிப்பிடும் வகையில் அதன் வளிமண்டலம் மற்றும் உயிரற்ற காரணிகளை மாற்றியுள்ளது. அதனால் பல வளி சார்ந்த உயிரினங்கள் பெருகின, ஓசோன் மண்டலம் உருவாகிபுவியின் காந்த மண்டலத்தோடு அகிலத்திலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களை தடுத்து உலகில் உயிர்கள் தழைப்பதர்க்கு வழி ஏற்பட்டது.[15] இக்காலகட்டங்களில் புவியின் பௌதிக தன்மையினாலும் புவி சூரியனை சுற்றி வந்தமையினாலும் உலகில் உயிர்கள் நிலைபெற்றன. தற்போதுள்ள, உயிர்களுக்கு ஏதுவான சூழல் மேலும் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வு தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.[16]
புவியின் மேற்பரப்பு பல இறுக்கமான பிரிவுகளாக, அல்லது டெக்டோனிக் பலகைகளாக அமைந்துள்ளது. அவை புவியின் மேற்பரப்பில் சிறிது சிறிதாக பல மில்லியன் வருடங்களாகநகர்ந்து வருகிறது. புவியின் சுமார் 71% மேற்பரப்பு உப்பு நீருள்ள பெருங்கடல்களாலும் மற்ற பகுதிகள் கண்டங்கள்,தீபகற்பங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான திரவ நீராலும் நிரப்பப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால் இந்த கிரகங்களில் திரவ நீர் காணப்படவில்லை. எனினும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மட்டும் திரவ நீர் இருப்பதாக உறுதியாக அறியப்படுகின்றது, மேலும் இன்று கூட அங்கு நீர் காணப்படுவதற்க்கான சாத்திய கூறுகள் அதிகம் எனலாம்.[17][18][19] அடர்ந்த திட மூடகம் (Mantle) அடுக்கு, காந்த மண்டலத்தை உருவாக்கும் திரவ வெளி மையம் மற்றும் திடஉள் மையம் ஆகியவற்றால் புவியின் உட்பகுதி மிகுந்த ஆற்றலுடன் இயங்குகிறது.
புவி, ஞாயிறு மற்றும் நிலா உட்பட பரவெளியில், உள்ள மற்ற பொருட்களுடன் ஊடாடுகிறது. தற்போது புவி தனது அச்சில் சுழல்வதோடு தோராயமாக 366.26 முறை கதிரவனயும் சுற்றி வருகிறன்றது. இதற்கான மொத்த கால அளவு ஒரு விண்மீன் ஆண்டு (sidereal year), இது 365.26 சூரிய நாட்களுக்குச் (solar day) சமம்.[note 4] புவியின் அச்சு சுழற்சி அதன் கோளப் பாதையிலிருந்து,[20] 23.4° செங்குத்தாக விலகி சாய்ந்துஇருப்பதால், கோளின் மேற்பரப்பில் கால மாறுபாடுகளை ஒருவெப்ப ஆண்டுக்கு (tropical year) தோற்றுவிக்கிறது (365.24 சூரிய நாட்கள்). புவியின் நாமறிந்த ஒரே இயற்கையான செயற்கைகோள் நிலா, 4.53 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அதனை சுற்ற ஆரம்பித்தது, இது கடலில்அலைகளை உருவாக்குவதோடு, புவியின் அச்சு சாய்வை நிலைப்படுத்தி, அதன் சுழற்ச்சியையும் சிறிது சிறிதாக குறைக்கிறது. தோராயமாக 4.1 மற்றும் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடையே காலம் தாழ்ந்த பலத்த தாக்குதல் (Late Heavy Bombardment) நடந்த வேளையில் பெரு விண்கற்கள் (asteroid) தாக்கம் புவியின் சுற்று சூழலில் குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்தியது.
புவியின் கனிம வளங்கள் மற்றும் உயிர்க் கோளத்தில் உருவான பொருட்கள் இரண்டுமாக உலக மக்கள்தொகை பெருக்கத்திற்கு துணை புரியும் வகையில் வளங்களை அளித்தது. அங்கு வாழ்பவர்கள் 200 தனித்த ஏகாதிபத்திய நாடுகளாக குழுவாக்கப்பட்டு, அரசியல், பயணம், வணிகம் மற்றும் இராணுவ செயல்பாடுகள் மூலமாக தொடர்பு கொண்டனர். தெய்வ வழிபாடு உட்பட, தட்டையான புவி அல்லது அண்டத்தின் மையத்தில் புவி உள்ளதுபோன்ற நம்பிக்கைகள், நவீன உலகப்பார்வையில் ஒருமைப்பாட்டுடன் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் இடம் என மக்கள் கலாச்சாரம் இக்கோளை பற்றி பல்வேறு விதமான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

Sunday, 20 September 2015

இசைக் கலைக்குப் பெண்களின் பங்களிப்பு

           


             இன்றைய அறிவியல் உலகில் சமூகத்தின் முக்கிய அங்கமாக ஆறறிவு கொண்ட மனிதர்கள் உள்ளனர். இவர்கள் ஆண், பெண் என்ற பிரிவினராக விளங்குகின்றனர். இவர்களுள் பெண்கள் இசைக்கலைக்கு ஆற்றியுள்ள பெரும் பங்கினை இக்கட்டுரை ஆராய்கிறது.

பதிகவழி இசைப் பாடல்கள் நல்கிய பெண்மணி

            காரைக்கால் என்னும் ஊரில் பிறந்து இனிய பாடல்களால் இறைவனைப் போற்றிப் பாடிய புனிதவதியார் என்னும் இயற்பெயர் கொண்ட ஒரு பெண்மணி இன்றைய வழக்கில் உள்ள கருநாடக இசை எனப்பெறும் தமிழிசை முறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் என்பதைப் பெண்ணினம் பெருமையோடு நினைவு கூருதல் வேண்டும். காரைக்காலம்மையார்(Karaikkal Ammaiyar) என்பது இவரது சிறப்புப் பெயராகும். சைவ நாயன்மார்(Saiva Nayanmar) அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர்.

            அம்மையார் இயற்றிய ''திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்'' இரண்டும் இனிய பண்களில் பாடப் பெற்ற இசைப் பாடல்களாகும். ''கொங்கைத் திரங்கி'' என்ற முதற் குறிப்புடைய மூத்த திருப்பதிகம், நைவளப் பண்ணிலும், ''எட்டியிலவம்'' எனத் தொடங்கும் இரண்டாவது மூத்த திருப்பதிகம் இந்தளப் பண்ணிலும் அமைந்தவை.

            ஒரு குறிப்பிட்ட பொருள் மேல் அடுக்கிய பத்துப் பாடல்கள் சேர்ந்த தொகுதி "பதிகம்" எனப்படும். தேவாரப் பதிகங்கள் பாடிய திருஞான சம்பந்தர்(Thirugnana Sambandar), திருநாவுக்கரசர்(Thirunavukkarasar), சுந்தரர்(Sundarar) ஆகிய மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர் காரைக்காலம்மையார். ஆகவே இவர் இயற்றிய மூத்த திருப்பதிகங்கள் இசையுலகில் முதன்மைப் பதிகங்களாகத் திகழ்கின்றன. இசை ரீதியாகவும் "நைவளம்" எனப்படுகிறது. நட்டபாடைப் பண்ணில் திருஞான சம்பந்தரின் "தோடுடைய செவியன்" எனப்பெறும் முதற் பதிகமும், இந்தளப் பண்ணில், சுந்தரர் அருளிய ''பித்தா பிறைசூடி'' எனப் பெறும் முதற் பதிகமும் காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகங்களைப் பின்பற்றி அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

            நட்டபாடைப் பண் தற்போது கம்பீர நாட்டை என்ற இராக உருவமாகவும், இந்தளப் பண் மாயாமாளவ கௌளை என்ற இராக உருவமாகவும் திகழ்ந்து வருகின்றன. கம்பீர நாட்டை இராகம், செவ்விசை அரங்கில் தொடக்கத்தில் பாடுவதற்கேற்ற இராகமாகவும், "மல்லாரி" என்ற நாகசுவர இசை மெட்டு அமைந்த இராகமாகவும் திகழ்கிறது. மாயா மாளவ கௌளை தொடக்கத்தில் இசைப்பயிற்சி மேற்கொள்ளக் கூடிய இனிய இராகமாகவும் திகழ்வது அறிந்து இன்புறத்தக்கது.

            ஆகவே இசையுலகுக்கு முதன்மைப்பண்களை இராகங்களை இசைப்பாடு-முறையை இசைப்பயிற்சி முறையை, ''பதிகம்'' என்கிற இசைப்பாடல் அமைப்பை அறிமுகப்படுத்திய காரைக்காலம்மையாரின் இசைப் பங்களிப்பு அளவிடற்கரியது.

            இறைவனை தலைவன் - தலைவி (நாயக-நாயகி) என்றும் உறவு நிலை மூலம் அடைகின்ற தத்துவ நிலையை "மதுரபக்தி" என்பர். இந்த முறையிலேயே திருப்பாவையையும், நாச்சியார் திருமொழிப் பாசுரங்களையும் தென்னக இசை வரலாற்றில் முதன் முதலில் ஆண்டாள் பாடியுள்ளார்.

''
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்''

எனத் தொடங்கும் திருப்பாவையின் முதற் பாடல் பதிக வழி இசைப்பாடல் அமைத்த காரைக்காலம்மையாரைப் பின்பற்றி நட்டபாடைப் பண்ணில் இசை அமைக்கப்பட்டு பிரபலமாகப் பாடப்பட்டு வரும் இசைப் பாடலாகும்.

            திருப்பாவையை இசையோடு பாடுவதால் பெண்களுக்குத் தாம் நினைத்த வாழ்வு அமையும் என்பது பரவலான நம்பிக்கை. எனவே பெண்களுக்கு நற்பலன் அளிக்கும் பாவை நோன்பின் பெருமையை பரவச் செய்த ஆண்டாள், இசைப் பாடல் நெறியிலும் மதுரபக்தியை வேரூன்றச் செய்தவர் எனலாம். இந்நெறியில் பிற்காலத்தில் தெலுங்கில் ஷேத்ரக்ஞரும், தமிழில் மாணிக்கவாசகர்(Manikavasagar), முத்துத்தாண்டவர்(Muthuthandavar), இராமலிங்க அடிகளார்(Ramalinga Adigalar) உள்ளிட்ட இயலிசைப் புலவர்களும், ''பதம்'' என்ற இசை உருப்படியை உலகிற்களித்து தமிழிசையை வளப்படுத்தியுள்ளனர்.

பண்ணிசை காத்த பாண்மகள்

            நீண்ட வரலாற்றுப் பெருமை மிக்க தேவாரப் பண்ணிசை(Thevaram) இன்றளவும் பழைமை மாறாமல் மரபுவழி பாடப்பட்டு வருகிறது. இம்மரபை ஏற்படுத்தித் தந்தவர் ஒரு பெண்மணி என்பது இசையுலகம் அறிய வேண்டிய ஒரு நற்செய்தியாகும். சோழ மன்னன் முதலாம் இராசராசன், நம்பியாண்டார் நம்பிகளின் துணை கொண்டு தேவாரத் திருமுறைகளைக் கண்டெடுத்தான். இப்பாடல்களுக்குரிய இசை முறையை ஒரு பாண் மகளின் துணையோடு உருவாக்கினான் என்ற வரலாறை ஈண்டு நினைவு கூர வேண்டும் இப்பாண்மகளை.

''
நல்லிசை யாழ்ப் பாணனார் நன்மரபின் வழிவந்த

வல்லி ஒருத்திக் கிசைகள் வாய்ப்பளித்தோம்.

என்று சொல்ல அவள் தனை அழைத்துச்

சுருதிவழிப் பண் தழுவும் நல்லிசையின்

வழி கேட்டு நம்பி இறை உளமகிழ்ந்தார்''

எனத் திருமுறை கண்ட புராணம் கூறும்.

இதில் ''நல்லிசை யாழ்ப்பாணர்'' என்று குறிக்கப் பெறுபவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர்(Thiru Nilakhanda Yaazpanar) ஆவார். இவரது ''நன்மரபின் வழிவந்த வல்லி ஒருத்தி'' என்று குறிக்கப் பெறுவதால், திருநீலகண்ட யாழ்ப்பாணர் பரம்பரையினள் இவள் என்றும் அறியலாம். இவள் பெயர் குறிக்கப் பெறாமையால் இப்பெண், பாணர் வகுப்பைச் சேர்ந்த ஒரு பாடினியார் என்று கூறலாம். ஆக சோழ மன்னன் காலத்தில் தேவாரப் பண்ணிசைகளை மீட்டெடுக்க உதவியவர் ஒரு பாடினியர் என்பதும் இவர் சுருதியுடன் சேர்ந்து பண்ணிசை பாடும் ஆற்றல் பெற்றிருந்தார் என்பதும் தெளிவு.

            மேலும் இவ்வல்லி தேவாரப் பண்ணிசையைக் காத்து அவற்றிற்கான பண்ணடைவும் செய்து கொடுத்தாள் என்பதும் தெரியவருகிறது. இவளது அரிய பணியால் பண்ணிசையின் தொடர்ச்சி கருநாடக இசையாகப் பரிணமித்து என்று கூறினாள். அது மிகையாகாது.

            மேற்கூறிய பெண்மணிகளை அடுத்து இருபதாம் நூற்றாண்டு வரையில் இசைக் கலையில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க நிலையில் அமையவில்லை என்பது வியப்பிற்குரியது. இதற்கு இக்கால கட்டத்தில் இந்தியப் பண்பாட்டு நிலையில் பெண்ணடிமை வேரூன்றத் தொடங்கியமையை ஒரு முக்கிய காரணமாகக் கூறலாம். இஃது தமிழிசையிலும் பரவலாக இருந்துள்ளது. கருநாடக இசையை முறைப்படி பாடக் கூடியவர்கள் ஆண்களே என்ற கருத்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இருந்துள்ளது.

            இந்த நிலையை இருபதாம் நூற்றாண்டு மகளிர் இசைக் கலைஞர்கள் மாற்றி தனிமுத்திரைகளைப் பதித்துள்ளனர். அவர்களுள் டாக்டர் எம்.எஸ். சுப்புலட்சுமி(M.S.Subbulakshmi), எம்.எஸ். வசந்தகுமாரி(M.S. Vasanthakumari), கே.பி. சுந்தராம்பாள்(K.B. Sundarambal) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் தமது அபூர்வமான இசை ஆற்றலாலும் அயராத உழைப்பினாலும் உலகப் புகழ் பெற்று பெண்ணினத்துக்குப் பெருமை தேடித்தந்துள்ளனர்.

இவ்வாறு இசைக் கலைக்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ள பெண்மணிகளை இனம் கண்டு அவர்களை ஊக்குவிப்பது இன்றைய நிலையில் செய்ய வேண்டிய இன்றியமையாத நற்பணியாகும்.

கிருமி

               Interesting facts about Germs in Tamil | நமது உடலில் உள்ள கிருமிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்:

                   
                        உலகில் எத்துனையோ அதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்துள்ளன!! உலகமே ஒரு அதிசயம் தான். நம் எல்லோரையும் தாங்கி பேரண்டம் எதுவுமே இல்லாத அந்தரத்தில் அழகாக நிற்பதே அதிசயம் தான். இப்படிப்பட்ட ஒரு அதிசயத்தினை, பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள உயிரிகளைப் பற்றியே இந்த கட்டுரை. எங்கும் இருக்கும் ஒரு விந்தையின் கதையை இப்போது பதியப்போகிறேன்.
அவைகள் தான் நுண்கிருமிகள். நுண் கிருமிகள் பற்றி தற்போது சவர்காரம் (அதாங்க soap ) மற்றும் பல்வேறு மருந்திட்ட திரவங்கள் (lotions) விளம்பரங்களில் கேடு விளைவிப்பவைகள் என்றும் அவை நோய் உண்டாக்குபவை என்றும் தகவல் தருகிறார்கள். ஆனால் அவைகள் அனைத்தும் உண்மை அல்ல. முதலில் நுண்கிருமிகள் என்றால் என்ன, அவைகள் எங்கே உள்ளன, அவைகளின் பயனென்ன என்பதினை காண்போம்.

                நுண்கிருமிகள் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளன. நம் உடலிலும், நாம் வாழும் சுற்றுப்புறத்திலும், நம் உணவிலும் கூட அவைகள் உள்ளன. நுண் உயிரிகள் இல்லாத இடமே இல்லை எனலாம். பார்க்கப்போனால் நுண்உயிரிகள் தான் நம் மூதாதையர்கள். பரிணாமக்கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு செல் உயிரிகளே தோற்றத்தில் முதலிடம் வகிக்கின்றன. ஓர் செல் உயிரி என்றாலும் அதனை நாம் சாதரணமாக எண்ணிவிடக்கூடாது. முதலில் ஒரு செல் என்பதனையே நிலைக்கருவிலி (prokaryote) மெய்க்கருவுயிரி (eukaryote) என்று பிரிப்பார்கள். இதில் நிலைக்கருவிலி என்பது மிகவும் சாதாரணமான செல் அமைப்பினைக் கொண்டதாகும். மெய்க்கருவுயிரி என்பது சற்று சிக்கலான செல் அமைப்பினைக் கொண்டதாகும். இவ்விரு வகைகளையும் அதனுடைய செல்சுவர் அமைப்பு, செல் உறுப்புகள், மரபணுவின் ஒப்புமை, மரபணுவினை சுற்றியுள்ள சவ்வு இதனைக்கொண்டு பிரிப்பார்கள். சரி இவ்வளவு கடுமையான விஷயங்களெல்லாம் இப்போது வேண்டாம்.

                நுண் கிருமிகளைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். எத்துனை வகையான நுண்கிருமிகள் இருக்கும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?? வழக்கமாக விளம்பரப்படங்களில் கிருமிகளை ஒரு புழுவைப்போலவும், சிறு சிறு குச்சிகளைப் போலவும் காட்டுகிறார்கள். ஆனால் நுண்கிருமிகள் எண்ணற்றவை.நுண்கிருமிகள் ஒன்று இரண்டு வகையான கிருமிகள் மட்டும் அல்ல, பல லட்சம் எண்ணிக்கையில் கிருமிகள் உள்ளன. ஒரு ஆய்வில் சுமார் 87 லட்சம் கிருமி வகைகள் உண்டென்று சொல்லப்படுகிறது.

                நுண்கிருமிகள் உண்டென்று ஜார்ஜியா பல்கலைக் கழகத்தினை சேர்ந்த பேராசிரியர் மற்றும் அவர் குழு ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையெல்லாம் விட நம்ம வயிற்றுக்கு வாருங்கள், அங்கே எவ்வளவு கிருமிகள் உண்டென்று உங்களுக்கு தெரியுமா? நமது வயிற்றுக்குள் இருக்கும் கிருமிகளின் தொகை நமது உடலில் உள்ள செல்களின் தொகையினை விட 10 மடங்கு அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். வயிற்றினை விடுங்கள், நமது வாயில் இருக்கும் நுண்கிருமிகளின் தொகை உலகில் உள்ள ஜனத்தொகையை காட்டிலும் இரு மடங்காகும். சற்று எண்ணிப்பாருங்கள், நாமே நுண்ணுயிரிகளின் உறைவிடமாகவும் விளங்குகிறோம்.

                பற்பசை விளம்பரங்களில் காண்பிப்பது போல எந்த பற்பசைக்கும் வாயில் உள்ள 100% கிருமிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது கிடையாது. பல் துலக்கிய பின்னர் உங்கள் வாயில் உள்ள கிருமிகளின் எண்ணிக்கை குறையும் அவ்வளவே. இன்னொரு வியக்கும் செய்தி என்னவென்றால், பலர் வாயில் கிருமிகள் இல்லையென்றால் நமக்கு பற்சொத்தை வராது என்று எண்ணுகின்றனர் அனால் உண்மை என்னவெனில் வாயில் பல்வேறு வகையான கிருமிகள் உள்ளன, அவற்றில் பற்சொத்தை உண்டாகும் கிருமிகள் மிக மிகக்குறைவே.

                நமது வாயில் இருக்கும் மற்ற நல்ல வகையான நுண்கிருமிகள் அகற்றப்படும் போது இந்த பற்சொத்தை ஏற்படுத்தும் கிருமிகள் பற்களில் மையம் கொண்டு பற்சொத்தை உண்டாக்குகின்றன. இதைப்போலவே சவர்காரம் (சோப்பு) விளம்பரங்களிலும், அது எல்லா கிருமிகளையும் அழிப்பது போலவும், கிருமிகள் இல்லாது வைப்பது போலவும் காட்டப்படுகிறது. இதுவும் உண்மையல்ல. மேற்கூறிய 87 லட்சம் கிருமிகளின் வகைகளில் 5 சதவீதத்திற்கும் குறைவான கிருமிகளே நோய் உண்டாக்குபவை. மற்ற கிருமிகள் எல்லாம் நோய் உண்டாக்காத வகைகளே. நாம் பிறந்தவுடனேயே நமது உடலில் கிருமிகள் புகுந்து விடுகின்றன.

                மனித உடலில் மூளை, இரத்தம்/ இரத்த ஓட்டப்பாதை மற்றும் நுரையீரல் போன்றவற்றில் நுண்கிருமிகள் இருப்பதில்லை. நம் வயிற்றில் உள்ள கிருமிகளின் பங்கு நம் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியம். அவைகள் பல்வேறு வளர்ச்சிதை மாற்றத்திற்கு வழி கோலுகின்றன. ஒரு ஆரோக்கியமான மனிதன் என்பவன் கிருமிகள் அற்றவன் அல்ல, அவன் உடலில் தேவையான கிருமிகளை தேவையான அளவு வைத்திருப்பவன். இவ்வகையான கிருமிகள் நமக்கு நோய் உண்டாக்கும் கிருமிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கின்றன. இவ்வகையான கிருமிகள் நம் உடலில் குறைந்தாலே நமக்கு நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம் என பல ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் தான் அதிகமாக நுண்ணுயிர்க்கொல்லி (ஆண்டிபியோடிக் தாங்க) எடுத்துகொள்ளகூடது என்றும் அறிவியலார்கள் கூறுகிறார்கள். அதிகமாக நாம் அதனை உட்கொள்வதினால்,இந்த நோய் உண்டாக்காத கிருமிகளின் எண்ணிக்கையினை குறைத்து நோய் உண்டாக்கும் கிருமிகளுக்கு வழிகோலுகிறது. சரி நண்பர்களேஇன்னும் நுண்கிருமிகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை அடுத்த கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன்.

Friday, 11 September 2015

வாசிக்கும் பழக்கம்


மலேசியர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஆராய 1982-இல் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு காட்டிய புள்ளி விவரம் நம்மை வெட்கித் தலை குனிய வைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில்நாம் ஓராண்டில் சராசரி ஒரு பக்கமே வாசிக்கின்றோம். மேலும் மலேசியாவில் குறைவான நூல்களே வெளியிடப்படுகின்றன. 1987-இல் கொரிய நாடு 44 288 நூல்களை வெளியீடு செய்த வேளையில் நம் நாட்டில் 3 000 நூல்களே வெளியீடு கண்டுள்ளன. இந்த வருந்ததக்க நிலையை உடனடியாகக் களைதல் அவசியமாகும். அதற்காகத்தான் அரசாங்கம் வாசிப்புப் பழக்கத்தை ஒரு கட்டாயமாக மாற்றியுள்ளது. இதனால்தான் அரசாங்கம் பள்ளி மாணவர்களிடம்நீலாம்என்ற ஒரு வாசிக்கும் நடவடிக்கையை அறிமுகப்படுத்திவுள்ளது. எதிர்காலத்தில் பதவி உயர்வு, வேலை வாய்ப்பு, உயர்கல்விக்கூடங்களில் வாய்ப்புப் போன்ற நடவடிக்கைகளுக்கு வாசிப்பை ஒரு கட்டாய விதியாக்கிவிடுவார்கள்.
                    ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
                                    மாடல்ல மற்றை யவை
 என்று நம்முடைய நான்முகனார் தமது திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார். ஒருவனுக்கு அழிவு இல்லாத செல்வமும் செல்வத்திலேயே சிறந்த செல்வமும் கல்வியே என்று இவர் இந்தக் குறளின் வழி நமக்குச் சொல்கிறார். மேலும் கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் இத்தகைய சிறப்புடைய ஒரு செல்வம் அல்ல என்றும் இவர் கூறியுள்ளார். நமக்கு இப்படிப்பட்ட ஒரு சிறந்த செல்வமான கல்வி எப்படிக் கிடைக்கிறது? நாம் வாசிப்பதனால்தானே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க முடிகிறது. இப்படிப்பட்ட சிறந்த கல்வி வாசிப்புத் திறனால்தானே வளர்கிறது. கல்வியைக் கற்பதால் நமக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கிறது. நாம் வேலை செய்வதால் ஊதியம் கிடைக்கிறது. மேலும் நம்முடைய எதிர்காலம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இதற்கான மூல காரணமே நாம் சிறுவயதிலிருந்து பின்பற்றிக் கொண்டிருக்கும் வாசிப்புப் பழக்கமே ஆகும்.
 வாசிப்புப் பழக்கத்தைச் சிறுவயது முதல் நாம் நம்முடைய இளைய தலைமுறைக்குப் பழக்கப் படுத்தவேண்டும். இந்த வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதில் ஆசிரியர்களும் பெற்றோர்களுமே முக்கியப் பங்காற்ற வேண்டும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் திறமையை உணர்ந்து அவர்கள் விரும்பிப் படிக்கும் நூல்களை வாங்கிக் கொடுத்து அவர்கள் படிப்பதற்கான சிறந்த சூழலையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு வயது பிள்ளைகளுக்கு வாசிக்கத் தெரியாது. இவர்களுக்குப் பெற்றோர்களே எழுத்துக்களை அறிமுகப்படுத்திச் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் ஒரு பாடப்பகுதியை வாசிக்கும்போது, அவர்கள் சொல் உச்சரிப்பில் பிழை செய்தால் ஆசிரியர்கள் அப்பிழையைத் திருத்த வேண்டும். இவ்வழிகளைச் சிறுவயது முதல் குழந்தைகளிடம் பின்பற்ற வைத்தால் நாளடைவில் குழந்தைகளுக்குப் வாசிப்பில் ஆர்வம் தென்படும். சிறு தென்னங்கன்று ஒன்று இருக்கும் போது நாம் அதற்குத் தினமும் நீர் ஊற்றி வந்தால் அத்தென்னங்கன்று தென்னைமரமாகியவுடன் நாம் ஊற்றிய நீரை இளநீராகக் கொடுக்கிறது. அதுபோலத்தான் சிறுவயது முதல் ஒரு பிள்ளையை வாசிப்புத் திறனுடன் வளர்த்தால் நாளடைவில் ஒரு சிறந்த செய்தி வாசிப்பாளராக வானொலி அறிவிப்பாளராக மற்றும் ஒரு சிறந்த சொற்பொழிவாளராகவும்  உருவெடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
 நாம் வாசிப்பதற்கு நாளிதழ், கதைப் புத்தகம், வார மாத இதழ்கள், போன்றவை நிறைய உள்ளன. இதைத் தவிர்த்துக் கணினியின் மூலமாகவும் நாம் வாசிக்கலாம். இணையத்திலிருந்து பல தகவல்களை வாசிப்புத்திறனாலேயே தெரிந்து கொள்கிறோம். நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தைச் சிலர் முக்கியப் பணியாகக் கருதுகின்றனர். காலையில் எழுந்தவுடன் நாளிதழைப் படிக்கவில்லை என்றால் அதைப் பேரிழப்பாகக் கருதுவர். இன்னும் சிலரைப் பார்த்தால் கதைப் புத்தகமே கதியாய்க் கிடப்பர். இத்தகையோரிடம் அறிவு மேலோங்கி இருக்கும்.
                 ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
                                      கற்றனைத் தூறும் அறிவு
என்பதைப் போல், மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். அது போல் மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு  அறிவு ஊறும். நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த அளவிற்குத்தான் நமக்கு அறிவும் வளரும். நமது அறிவு வளர்ந்தால் கிணற்றுத் தவளையைப் போல் இல்லாமல் பொது அறிவை வளர்த்துக்கொள்ளலாம். மேலும் நாம் வாசிப்பதால் நம்முடைய சொல் உச்சரிப்பும் வளரும். காலத்தையும் பயனுள்ள வழியில் செலவழிக்கலாம்.

 இறுதியாக, நாம் வாசிப்புத் திறனை வளர்த்துக் கொண்டால் நாம் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம். டாக்டர் காதர் இப்ராகிம் போல் ஒரு நல்ல பேச்சாளராக ஆகலாம். மேலும் நூலை நம்முடைய தோழனாக மாற்றியமைத்துக் கொள்ளலாம். வாசிப்புப் பழக்கம் நமது நல்ல பண்பாக அமைகிறது. வாசிப்புப் பழக்கத்தின் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ள நூல்கள் பெரும்பங்காற்றி வரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆகவே, நாம் சிறு வயதிலிருந்து வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும்.